அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கடல்வழி முற்றுகை மற்றும் ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஈரானிய பிரதிநிதி அமீர் சையத் இரவானி, பிப்ரவரி 28 முதல் தொடரும் இந்தத் தாக்குதல்களால் பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்தார். ஈரானிய வணிகக் கப்பல்களைச் சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்வதும், ஊழியர்களைத் தடுத்து வைப்பதும் ஐநா சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடினார். இப்பகுதியில் ஏற்படும் கப்பல் போக்குவரத்து இடையூறுகளுக்கு அமெரிக்காவே நேரடிப் பொறுப்பு என்றும், அவர்களின் இத்தகைய சீர்குலைக்கும் நடவடிக்கைகள் கடல்சார் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் ஈரான் எச்சரித்துள்ளது.