தாய்லாந்தின் காஞ்சனபுரி நகரில் அமைந்துள்ள பழமையான புத்தர் கோயிலில் வளர்ப்பு பிராணியாக புலிகள் வளர்க்கப்பட்டதால் புலிக்கோயில் என்று அழைக்கப்பட்டு வந்தது. அங்கு வளர்க்கப்பட்ட புலிகளுடன் புத்த பிட்சுகள் இயல்பாக நடந்து செல்வதும், கொஞ்சுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்ததுடன், புலிகளுடன் புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு அங்கிருந்த புலிகள் அனைத்தும் மீட்கப்பட்டு உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், மீட்கப்பட்ட புலிகளில் 86 புலிகள் இறந்து விட்டதாக பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர். இடமாற்றம் செய்தபோது கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் உணவை எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், வைரஸ் பாதிப்புகளால் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இது, தாய்லாந்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.