``கட்டுக்கடங்காமல் கைமீறிய நிலைக்கு சென்றது ஈரான் போர்’’ - உலகிற்கே கவலை அளிக்கும் செய்தி ஈரான் யுத்தம் எல்லை மீறிச் சென்றுவிட்டது என ஐ.நா. கவலை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றுவிட்டதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வலியுறுத்தினார். மேலும், இந்தப் போரில் நேரடித் தொடர்பு இல்லாத அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டிருப்பதால் உலக அளவில் எரிபொருள் மற்றும் உர விநியோகம் பாதிக்கப்பட்டு, பொருளாதார அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நிலைமை மேலும் மோசமாவதற்கு முன்பாக அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.