கன்னியாகுமரி அருகே குடும்ப தகராறில் பெண்ணின் வீட்டு மின் இணைப்பை துண்டித்த மைத்துனர், அதனை சரிய செய்ய வந்த மின்வாரிய ஊழியரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தக்கலை பகுதியை சேர்ந்த விஜிலா என்பவரது கணவர் கொரோனா தொற்றின்போது இறந்துவிட்ட நிலையில், விஜிலா தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவரின் சகோதரரும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி ஒப்பந்த பணியாளருமான ஜெயகுமார், விஜிலாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டின் அருகே மின் இணைப்பு கம்பியை துண்டித்துள்ளார். இதனை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியரான பள்ளியாடியை சேர்ந்த அரவிந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கியுள்ளார். காலில் படுகாயமடைந்த அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயகுமாரை தேடிவருகின்றனர்.