வடபழனி, சென்னை
ஸ்கூட்டியில் சென்ற பெண் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் படுகாயம்
சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலால் பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவர், வடபழனியில் உள்ள தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துகொண்டிருந்தார். அப்போது வடபழனி 100 அடி சாலையில் அறுந்து வந்த மாஞ்சா நூல், எதிர்பாராத விதமாக அவரது கழுத்தை அறுத்தது. இதில் காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நல்வாய்ப்பாக அவருடன் வந்த மகள் காயமின்றி தப்பினார். மாஞ்சா நூல் பயன்படுத்தக் காவல்துறை கடும் தடை விதித்துள்ள நிலையிலும், இத்தகைய ஆபத்தான செயல்கள் தொடர்வது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.