தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.