விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 25 வயது பெண் பயணி உயிரிழந்தார். அரசுப் பேருந்தானது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து திண்டிவனம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வேகமாக வந்த லாரி, அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரசுப்பேருந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தால் அரசுப்பேருந்தில் பயணித்த சசிகலா என்ற 25 வயது பெண் உயிரிழந்தார். காயம் அடைந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் லாரிக்குள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில் அவரும் போராடி மீட்கப்பட்டார். இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.