தமிழ்நாடு

ஊரடங்கில் மது விற்பனை அமோகம் : 'சரக்கு' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு

வாணியம்பாடியில் சரக்கு என்ற வாட்ஸ்அப் குழு அமைத்து ஊரடங்கிலும் கனஜோராக மது விற்பனை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் கனஜோராக கள்ளச்சாராய விற்பனை நடந்து வந்ததும், அதுதொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்தது.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததும் உறுதியான நிலையில் போலீசார் ஏராளமானோரை கைது செய்தனர்.

இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் நடந்த சோதனையில் 5000க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரயில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விதவிதமான மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் போலீசாரையே இப்போது அதிர வைத்திருக்கிறது சரக்கு என்ற பெயரில் இயங்கி வந்த வாட்ஸ் அப் குழு ஒன்று. கடந்த மாதம் 13ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் குழுவின் பெயர் சரக்கு... இதன் அட்மினாக இருந்தவர் பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த 25 வயதான ஜனார்த்தனன்.. இந்த குழுவின் நோக்கம் குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்வது தான்...

தனக்கு இந்த பிராண்ட் மதுபானம் வேண்டும் என வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்தால் போதும்.. அது ஆடியோ, உரையாடல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்... பணத்தை கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் பெற்றுக் கொண்டு, இங்கு போய் மதுவை வாங்கிக் கொள்ளுங்கள் என்ற உத்தரவும் அதே வாட்ஸ் அப் குழுவில் வருகிறது...

இப்படியாக மதுவை ஊரடங்கில் விற்க திட்டம் போட்டு ஒரு குழுவே இயங்கி வந்திருக்கிறது... 150 க்கும் மேற்பட்டோரை கொண்டு செயல்பட்டு வந்த இந்த குழுவின் உரையாடல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது...

வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி கள்ளச்சாராயத்தையும் சலுகை விலையில் கடந்த சில மாதங்களாக விநியோகித்து வந்துள்ளது இந்த சரக்கு குழு... இந்த விவகாரம் வெளியான சில மணி நேரங்களிலேயே சுற்றி வளைத்த போலீசார், வாட்ஸ் அப் குழு அட்மினான ஜனார்த்தனன், சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்...

கைதான அவர்களிடம் மதுபானங்கள் எங்கிருந்து கிடைத்தது? அவற்றை விற்பனை செய்தது எப்படி? உள்ளிட்டவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை