திருச்செந்தூரில் 10.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 52 பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வருகிற ஏழாம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதிகள் அனைத்தும் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. முன்னதாக இந்த நிகழ்ச்சி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அஜித்குமார் மரண வழக்கு - 3 வது நாளாக தீவிர விசாரணை
காவல் விசாரணையில் கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் வழக்கு தொடர்பாக மூன்றாவது நாளாக நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அஜித்குமாரை ஆட்டோவில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்த ஓட்டுனர், அஜித்குமார் மரணத்தை முதன் முதலில் உறுதி செய்த திருப்புவனம் மருத்துவர் கார்த்திகேயன், உடற்கூராய்வு செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினார். மேலும் இடைக்கால பிரேத பரிசோதனையில் அஜித்குமாருக்கு ஏற்பட்ட காயம், குறித்து கேட்டறிந்த நீதிபதி, காவல் நிலையத்தில் அன்றைய தினம் பணிபுரிந்த 3 காவலர்களிடம் விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.