தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு.தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை, ஒரு மாதத்தில் வழங்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதித்யசோழன், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விண்ணப்பித்த நிலையில்,தகவல்கள் வழங்கப்படாததை அடுத்து, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.அதன் மீது முடிவெடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதித்ய சோழன் வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் விண்ணப்பம் மீது 12 வாரங்களில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டது.இந்த உத்தரவின் அடிப்படையில், மாநில தகவல் ஆணையர் ஷகீல் அக்தர், மனு மீது விசாரணை நடத்தினார்.விசாரணையின் போது, மனுதாரர் கோரிய விவரங்களை வழங்க மறுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த தகவல் ஆணையம், ஒரு மாதத்தில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.