கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச்சத்தும் வேண்டும் என்பதால், சத்துணவில் வழங்க வேண்டிய முட்டைகளை வீடுகளுக்கு சென்று
மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று முட்டை வழங்குவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, சத்துணவுக்கு பதில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதைப் போல, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம், மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் பள்ளிகளுக்கு சென்று முட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர். இது தற்காலிக ஏற்பாடு தான் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.