திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில், இலவச குளிர்சாதனப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஏசி பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மத்திய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து கோயில் வரை, இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், கிரிவலம் செல்வதற்கு 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுழற்சி முறையில் இயக்கப்படும் இந்த இலவச பேருந்து சேவையால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.