ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த உமர்செரிப் தம்பி கண்ணு என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். டிக் டாக்கில் பிரபலமான இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு டிக் டாக் மூலம் 34 வயதான பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார். இதனிடையே உமர்செரிப் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாகவே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஆனால் திருமணம் செய்து கொள்ள உமர் ஷெரிப் மறுத்ததால் சந்தேகமடைந்த அந்த பெண் விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதோடு, 10 சவரன் நகை மற்றும் பணத்தையும் பறித்துக் கொண்டதாக அவர் புகார் அளித்த நிலையில் உமர்செரிப் தம்பி கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.