ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த அலமனேந்தலில், கண்மாய் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அதை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுடன் பார்வையிட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்றால், பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என எண்ணுவதாக கூறினார். ஆனால், அதற்கு தேவையான பணம் தம்மிடம் இல்லை என வேதனை தெரிவித்த அவர், தான் ஒரு கூத்தாடி என்றும், தனக்கு 2ஆம் நம்பர் தொழில் ஏதும் கிடையாது என்றும் கூறினார். எனவே தொகுதி மக்களுக்கு உதவ பணமில்லை என வேதனை தெரிவித்த கருணாஸ், ஏழை எளியோருக்கு இதுவரை 2 ஆயிரம் டன் அரிசி வழங்கியுள்ளதாக கூறினார். முதலமைச்சரிடம் நிதி கோரியபோது, ஏற்கனவே மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, அரிசி உள்ளிட்ட நிவாரணம் வழங்கிவிட்டதாக கூறினார் என்றார்.