காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். பின்னர், காமாட்சி அம்மனை தரிசித்த அவர் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்
சித்ரா பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்த ஆபூர்வ காட்சி உலகில் ஆபிரிக்கா நாட்டின் அடர்ந்த காட்டுபகுதியிலும், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும் மட்டுமே தெரியும். இந்த அபூர்வ காட்சியை பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். மழை மேகங்கள் காரணமாக சூரியன் மறைவதை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியவில்லை. அதே வேளையில் முக்கடலில் இருந்து சந்திரன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் கடந்த16ம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே காட்டுக்குள் பொங்கல் வைத்து வழிபாடு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காப்புக்காட்டில் இரவு நேரத்தில் கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் பெண்கள் சாலை மறியலுல் ஈடுபட்டனர். ஊமப்பாளையம் பகுதியைச்சேர்ந்த கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று இரவு வனப்பகுதிக்குள் சென்று பொங்கல் வைத்து சுவாமியை வழிபடுவது வழக்கம். சூனால், இந்த ஆண்டு காட்டுக்குள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். தாரை தப்பட்டாத்துடன் சென்ற சாமி ஊர்வலத்தை வனத்துறையினர், தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடையை மீறி வனப்பகுதிக்குள் கிராமமக்கள் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.