தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் குறித்த முழு விவரத்தை ஜனவரி 4ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடுகள் இன்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தற்காலிக தங்குமிட வசதி ஏற்படுத்தி தரக் கோரி வழக்கறிஞர் முருகானந்தம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விற்பனை, சேவை என வரிகளை வசூலிக்கும் அரசு, வீடில்லா ஏழை மக்களுக்கு மார்ச் மாதம் வரை தற்காலிகமாக தங்கும் வசதியை ஏற்படுத்தி தருவதோடு, கம்பளி போர்வைகள் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வீடில்லாமல் உள்ள மக்களின் விவரங்கள் குறித்து ஜனவரி 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.