காவல் துறையினரின் சட்ட விரோத நடவடிக்கைகளில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில், பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில் காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
கடந்த 2006ம் ஆண்டு பிறப்பித்த இந்த உத்தரவு கடந்த 13 ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இச்சட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து மார்ச் 14ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.