கட்டாய தமிழ் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், சட்டத்தில் தண்டனைப் பிரிவுகளை சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
10 ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயமாக பயிற்றுவிப்பதற்காக, கட்டாய தமிழ் சட்டம், 2006 ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க, டில்லியைச் சேர்ந்த பிரம்மநாயகம் ஆவுடையப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். 10 ம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்ட மாணவர்கள், விருப்ப பாடமாக தமிழ் மொழியை படிக்கலாம் என விலக்களித்து கடந்த 2024 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கட்டாய தமிழ் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தும் வகையில், தண்டனை பிரிவுகளை சேர்க்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்வதற்காக விசாரணையை செப்டம்பர் 29 ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.