நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதி வழியாக எடுத்து செல்லக்கூடாது என ஒருதரப்பினர் கூறியதால் நேற்றிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருசக்கர வாகனங்கள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க செங்கோட்டை பகுதியில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டது.
அப்பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.
இந்நிலையில் மர்ம நபர்கள் ஒரு சிலர் ஊர்வலத்தின் மீது கல் வீசியதால் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வீசியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.