வசதி படைத்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்கான தொகையை மேம்பாட்டிற்காக கொடுக்கலாம் என சகாயம் அரசியல் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சகாயம் அரசியல் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல இருந்ததாகவும், ஆனால், அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவேன் எனக்கூறி, சகாயம் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சைக்கு செலவான கட்டணத்தை அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக சகாயம் வழங்கினார் என குறிப்பிட்டுள்ளதோடு, வசதி படைத்தவர்கள் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றால், அதற்கான கட்டணத்தை கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் கடன் சுமை குறைவதோடு, பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வரமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.