வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகள் கடத்தி வந்த கார் விபத்துக்குள்ளானது. ஆந்திர வனத்துறையினரிடமிருந்து தப்பித்து வந்த கார், தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் இரு மாநில வனத்துறையினரும் சினிமா பாணியில் துரத்தினர். பின்னர் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காரில் இருந்த மூவர் உடனடியாக தப்பி ஓடினர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். காரில் இருந்து சுமார் 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறையினரின் காரை கவிழ்ப்பதற்காக கடத்தல்காரர்கள் செம்மர கட்டைகளை சாலையில் வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.