ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது முதல் முறையாக 2018 திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் மீனவர் ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்படும். அதனை கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் படகுகளுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என, மத்திய அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.