திருச்சி மாவட்டம் முசிறி அருகே கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா,அதே கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாரதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதனிடையே பெண்ணின் மரணத்திற்கு கணவர் பாரதிராஜாவே காரணம் என குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.