கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாதுரை, ஆலங்குடியில் உள்ள தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை உணவு பொருட்களை தயாரிக்க முடிவு செய்தார்.
தற்போது 50 -க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருவதாக கூறும் அண்ணாதுரை, இயற்கை உணவுப் பொருட்களான கருப்பட்டி வெல்லம் , நாட்டுச்சர்க்கரை , வேப்ப எண்ணெய் , உப்பு , திணை வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கின்றார். இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கூறும் அண்ணாதுரை, தற்போது சென்னை தீவுத்திடலில் 46 வது சுற்றுலா பொருட்காட்சியில் அரங்கு அமைத்துள்ளார்.
இயற்கை உணவுக்கு மாறி உள்ளதால், உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், மருத்துவர்கள் கூட இயற்கை உணவை உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவதாகவும் பெரம்பூரை சேர்ந்த வாடிக்கையாளர் சூர்யகலா தெரிவித்தார்.
இயற்கை உணவுகளை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுத்து வளர்த்தால் வரும் தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வாடிக்கையாளர் கற்பகம்.
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இயற்கை உணவை நாட வேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது.