அரிய வகை நோயால் நாகை சிறுமி பாதிப்பு - உதவுவதாக நிர்மலா சீதாராமன் பரிசீலனை நாகையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு மத்திய அரசு சார்பில் உதவுவது தொடர்பாக பரிசீலிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை தனன்யா, முதுகெலும்பு தசை சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு 9 கோடி ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது. குழந்தை தனன்யா மற்றும் பெற்றோரையும் தந்தி டிவிக்கே நேரடியாக அழைத்து வந்து, அவர்களது கோரிக்கையை நேரலையாக ஒளிபரப்பினோம்... இதைப்பார்த்த பலரும் குழந்தை தனன்யாவின் சிகிச்சைக்காக உதவ முன்வந்துள்ளனர்.. இந்த நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, எம்பி செல்வராஜை நேரடியாக அழைத்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குழந்தை தனன்யாவின் சிகிச்சைக்கு உதவுவது தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறார்.