தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் நெல்லை மாவட்டம் மானுர் அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதா கோவில் தெருவில் நடைபெற்ற திருமண விழாவில், பேனர் வைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஊர் பெரியவர்கள் சமரசம் செய்த நிலையிலும், கஞ்சா மற்றும் மதுபோதையில் முகமூடி அணிந்து 3 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், திருமண வீட்டின் அருகே நின்றவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இந்த வெறியாட்டத்தில் தந்தை, மகன் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும், அங்கிருந்த கார், பைக்குகள் மற்றும் கடைகளையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது. இதோடு நிறுத்தாமல், நெல்லை மாவட்டம் மானூர் பகுதியிலும் புகுந்து மேலும் இருவரை வெட்டிவிட்டு தப்பியோடியது. ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, நெல்லை சரக டிஐஜி உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அதிரடி வேட்டை நடத்திய போலீசார்,நெட்டூரைச் சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.