முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு, தாமே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக நளினிக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தார். 'நேரில் ஆஜராகும் அவரது உரிமையை பறிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், 'அடுத்த மாதம் 5ஆம் தேதி நளினியை நேரில் ஆஜர்படுத்தவும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டனர்.