திடீரென படையெடுக்கும் மர்ம பூச்சிகள் - பூத்த பூவெல்லாம் கண்முன்னே கருகிய பெருஞ்சோகம் போச்சம்பள்ளி அருகே பூச்சித் தாக்குதலின் காரணமாக மா சாகுபடி பாதிக்கப்பட்டதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மாம்பழம் மற்றும் மாங்காய்க்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடமாகும். இந்த பகுதி முழுவதும் மா மரங்கள் ஏராளமாக விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இங்கிருந்து மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர். போச்சம்பள்ளியை சுற்றியுள்ள வேலம்பட்டி, அரசம்பட்டி, புலியூர், மத்தூர், தாதம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில், மா சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் செய்யப்பட்டுள்ளன. தற்போது மா மரங்கள் காய் காய்க்கும் பருவத்தில் இருப்பதால், விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென யாரும் எதிர்பாராத விதமாக தத்துப்பூச்சி மற்றும் கருப்பு வண்டு போன்ற பூச்சிகளின் தாக்குல் ஏற்பட்டு, பிஞ்சுகள் உதிர்ந்தும், கருகியும் வருகின்றன. இந்த மர்மப் பூச்சிகளின் படையெடுப்பால் மா விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.