Madurai | Chithirai Festival | கள்ளழகர் சித்திரை திருவிழாவில் 10 ஆண்டுகளாக இஸ்லாமிய தம்பதி செய்து வரும் நெகிழ்ச்சி செயல்
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை மூன்றுமாவடி பகுதியில் கோலாகலமாகத் தொடங்கியது. கள்ளழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக மதுரை கோ புதூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி காதர்பாய் மற்றும் சுல்தான் பீவி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வரும் தொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர்கள் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் சாலையின் இருபுறமும் சொந்த செலவில் சாமியானா பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். கள்ளழகர் அழகர்மலையில் இருந்து கிளம்பியது முதல் மீண்டும் திரும்பும் வரை பக்தர்களின் தாகம் தீர்க்கவும் அவர்கள் நிழலில் அமர்ந்து செல்லவும் இந்தத் தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் இணைந்து சேவையாற்றி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இஸ்லாமியத் தம்பதியின் இந்த மனிதாபிமானம் மிக்க செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.