Madurai Chithirai Thiruvizha | களைகட்டும் மதுரை சித்திரை திருவிழா - `தோப்பறை' வாங்க படையெடுக்கும் பக்தர்கள் மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவையொட்டி, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கள்ளழகர் மற்றும் கருப்பசாமி வேடமிடுவதற்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய 'தோப்பறை' எனப்படும் தோல் பைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது, பக்தர்கள் ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட பைகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது வழக்கம். நடப்பாண்டு இயந்திரங்கள் மூலம் தண்ணீர் தெளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பாரம்பரியத் தோல் பைகளின் விற்பனை மதுரையில் சூடுபிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த ஏராளமான கைவினைஞர்கள் தயாரிக்கும் இந்தத் தோல் பைகள் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், பக்தர்கள் அணியும் மூங்கில் தலைப்பாகை, சல்லடம், சாட்டை மற்றும் திரியாட்ட ஆடைகளும் கீழமாசி வீதி மற்றும் குன்னத்தூர் சத்திரம் பகுதிகளில் அதிகளவில் விற்பனையாகின்றன.