மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. , யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் 2ஆயிரத்து 381 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் 52 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் துவக்கி வைத்தார். எழும்பூர் அரசு மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர், 7 குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரத்து 932 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 50 ஆயிரம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.