கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், முதன்முறையாக புதிய வடிவிலான வடிகால் அமைப்பும், முழுமையான சுடுமண் தட்டும் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வுக் குழியில் சுமார் 2 மீட்டர் ஆழத்தில் செங்கல் கட்டுமானமும், அதன் அருகே மூன்றரை மீட்டர் நீளமுடைய வடிகால் அமைப்பும் வெளிப்பட்டுள்ளது. திரவப் பொருட்கள் வெளியேறும் வகையில், வெறும் 10 சென்டிமீட்டர் அகலத்தில் இந்த வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அகரம் மற்றும் கொந்தகை பகுதிகளில் சேதமடைந்த சுடுமண் தட்டுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீழடியில் முழுமையான சுடுமண் தட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதனை முழுமையாக எடுத்த பின்னரே, அதன் பயன்பாடு மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்து தெளிவான தகவல்கள் தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.