கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் அலைகள் அதிகமாக இருக்கும் என்று கூறும் அவர்கள், ஓகி புயலால் பாதிக்கப்பட்டதிலிருந்தே கோரிக்கை முன்வைத்து மனு அளித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், தங்கள் பகுதிக்கு வரும் அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவதாக வேதனை தெரிவிக்கும் கடியபட்டணம் மக்கள், எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரிடமும் மனு அளித்த பயனில்லை என்றனர். உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், எத்தனை நாள் இப்படி வாழ்வது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.