கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூங்குழலி என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கணித தேர்வு எழுதிவிட்டு விடுதி அறைக்கு சென்ற பூங்குழலி வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக மாணவி ஒருவர், அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு இறந்த நிலையில் பூங்குழலியின் உடல் தொங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், தங்களிடம் கேட்காமல் எப்படி உடலை கொண்டு வரலாம் என்று கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் சாவுக்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.