வருத்தம் தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும், தான் தவறாக புரிந்து கொண்டதற்கு வருந்துவதாகவும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை பாலவாக்கத்தில் ஓட்டல் ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபரால் உடைக்கப்பட்டது. தேர்தல் சூழலில் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியை விமர்சித்திருந்ததால், இது அரசியல் தாக்குதலாக இருக்குமோ எனப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் காரை நிறுத்திய ஓட்டலுக்கும், அண்டை வீட்டாருக்கும் இடையிலான முன்விரோதமே காரணமாக, அண்டை வீட்டார் கார் கண்ணாடியை உடைத்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், தற்செயலாக நிகழ்ந்த சம்பவத்தை உணர்ச்சிவசப்பட்டு அரசியல் கோணத்தில் பதிவிட்டது தனது தவறு என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் வாழ்க்கையின் அனுபவப் பாடங்களுக்கு முடிவே இல்லை எனவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.