Instagram | Police | இன்ஸ்டா சவகாசம்.. சர்வ நாசம்.. கணவன் வந்ததும் பெரும் கிரைம் ட்விஸ்ட்
சென்னை திருவொற்றியூரில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணிடம், 155 பவுன் தங்க நகை மற்றும் 30 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புது வண்ணாரப்பேட்டையில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த 33 வயது பெண்ணுடன், திருவொற்றியூரை சேர்ந்த 33 வயது ஹரிகிருஷ்ணன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இவர், சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளுக்கு கப்பலில் சரக்கு களை ஏற்றி விடும் தொழில் செய்து வந்தார். திமுகவில் இளைஞர் அணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தன்னை அரசியல் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் என அந்த பெண்ணிடம் ஹரிகிருஷ்ணன் கூறியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு முதல் சிறுக சிறுக நகை மற்றும் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. கணவருடன் மீண்டும் இணைந்த அந்த பெண் நகை, பணம் குறித்து கேட்டபோது, ஹரிகிருஷ்ணன் திருப்பித்தர மறுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வடக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து கமிஷனரின் உத்தரவின்பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.