கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, மண் கடத்தலைத் தடுக்கச் சென்ற வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை வாகனம் ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனந்தூர் ஏரியில் சட்ட விரோதமாக மண் எடுக்கப்பதாக வந்த புகாரையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊத்தங்கரை வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர், ரகசியமாக அங்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் தப்பிக்க முயன்ற ஜேசிபி ஓட்டுநர், தனது வாகனத்தின் முன்பகுதியால் அதிகாரிகளை கொல்ல முயன்றுள்ளார். ஆனால், அதிகாரிகள் குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை அடுத்து, ஜேசிபி வாகன ஓட்டுநர் அங்கிருந்து தலைமறைவானார். துணை வட்டாட்சியர் சக்தி, துணிச்சலாக ஜேசிபி வாகனத்திற்குள் இறங்கி, வண்டியை நிறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த தனிப்படை போலீசார், திருப்பத்தூர் மலையில் பதுங்கியிருந்த ஜேசிபி உரிமையாளர் சுரேஷ், லாரி ஓட்டுநர் தங்கபாலு ஆகியோரை கைது செய்தனர்.