ஆதம்பாக்கத்தில் இணைப்பு சாலைக்காக பாலம் அமைக்க வீடுகள் அகற்றம் மாற்று இடம் கூட தராமல் அகற்ற எதிர்த்த மக்கள் போராட வந்த அதிமுக, பா.ஜ.க.வினர் கைது
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஜீவன் நகர் 2வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோடு இணைக்க புதிதாக பாலம் அமைக்க ரூ. 5 கோடி செலவில் சிறிய பாலம் கட்டுப்படுகிறது. இந்த இணைப்பு சாலை அமையும் பகுதியில் சுமார் 7,200 சதுர அடி இடத்தில் 5 வீடுகள் இருக்கிறது. அந்த 5 வீடுகளும் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டி உள்ளார்கள் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நீர்வளத்துறை, வருவாய் துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து 4 வீடுகளை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். அப்போது அதிமுக பகுதி செயலாளர் பரணிபிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ்குமார், பாஜகவை சேர்ந்த வினோத், இன்பராஜ், பாஸ்கர் உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இதற்காக முறையான ஆவணங்கள் உள்ளது. ஏரியில் வருகிறது என்ற முறையான ஆவணங்களை காட்டி அகற்றுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட சென்றனர். போலீசார் அதிமுகவினரை கைது செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு தடையாக இருப்பதாக பா.ஜ.க.வினரை கைது செய்தனர். பின்னர் வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது. மேலும் 3 வீடுகளுக்கு மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் உறுதி தந்ததாகவும் ஆனால் மாற்று இடம் தராமல் தாங்களை நடு ரோட்டில் விட்டு விட்டதாக கூறி பெண்கள் அழுதனர். மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன், கிண்டி உதவி கமிஷனர் சிவா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.