கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் ஆன் லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்க கோரி பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக ஷேக் அப்துல்லா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சட்ட விரோதமாக ஆன் லைனில் பட்டாசு விற்பனை துவங்கி விட்டதால், அந்த இணையதளங்களை முடக்க சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு , உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். ஆன் லைன் மூலம் பட்டாசுகள் விற்பது தண்டனைக்குரியது என விளம்பரப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.