சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரை பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக, அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி, விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கு தொடர்பான ஆதாரங்களை காவல் துறை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தை தெரிவித்துள்ளதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி யில் 5 மாணவர்கள் இதே போல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது எனவும், விசாரணை குழுவில் சிபிஐ யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.