சென்னையில் மீண்டும் இறங்கிய பிரபல `மேவாட்’ கேங் - தமிழகத்திற்கே உச்சபட்ச அலர்ட்
சென்னை அருகே சோமங்கலம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம்களில் கேஸ் கட்டர் மூலம் 21 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக உள்ள வடமாநிலக் கும்பலைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் ஹரியானா விரைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த பிரபல மேவாட் கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசைக் காட்டத் தொடங்கியுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதியான சோமங்கலம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் ஒரே இரவில் அடுத்தடுத்து ஏடிஎம் மையங்களைக் குறிவைத்த இந்தக் கும்பல், நவீன கேஸ் கட்டர் இயந்திரங்களைப் பயன்படுத்தி மொத்தம் 21 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நள்ளிரவு நேரத்தில் இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சிப்காட் மற்றும் தாம்பரம் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி மற்றும் சோழவரத்தில் திருடப்பட்ட ஜீப் ஆகியவை கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த லாரி தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதற்கிடையே, ஜெய்ப்பூர் ஏடிஎம் கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அரியானா சிறையில் இருக்கும் பவன்குமார் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காகத் தாம்பரம் தனிப்படை போலீசார் ஹரியானா விரைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேவாட் கொள்ளை கும்பலின் மற்ற நபர்களை இரு மாநில போலீசாரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
#mewatgang #chennaiatmrobbery