தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி சுனில் சேட் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர், உறுப்பினர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்து, தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருவதாகவும், அதன்பின் பணி ஆணை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து நேர்முகத்தேர்வை நடத்தி முடித்து பணி நியமனம் வழங்கும் பணியை துரிதப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.