தாளவாடியில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கிருஷ்ணாபுரம் கிராமத்திற்குள் புகுந்து விவசாயிகளின் வாழை மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சைரன் ஒலியுடன் வாகனங்களை இயக்கி, சத்தம் எழுப்பி சுமார் இரண்டு மணி நேரம் போராடி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்களில் யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், நிரந்தர தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.