Dindigul | திருமண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - கோவிலில் நடந்த திருமணம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூரைச் சேர்ந்தவரின் திருமண நிகழ்விற்காக உறவினர்கள் குவிந்திருந்த நிலையில், மர்ம நபர்களின் மிரட்டலை தொடர்ந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால், மண்டபத்தில் நடைபெறவிருந்த திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அருகில் உள்ள கோவிலில் அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த திருமண விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொள்ளவிருந்த நிலையில் விடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.