சென்னை பல்லாவரத்தில் நகைக்கடை நடத்தி வரும் பிரகாஷ்குமார் என்பவரின் கடைக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர், தான் பிரபல மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிவதாக கூறி அறிமுகமாகியுள்ளார். தன்னுடன் பணிபுரியும் சக மருத்துவர் ஓய்வு பெற இருப்பதால் அவருக்கு தங்க நகை கொடுக்க உள்ளதாகவும் கடையில் இருந்து நகையை கொண்டு வருமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய பிரகாஷ் குமார், ஊழியர் வெங்கடேசன் மற்றும் சத்தியநாராயணனிடம் 24 சவரன் நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். மருத்துவமனைக்கு வந்த அவர்களிடம் மருத்துவரின் உதவியாளர் என கூறிய சீனிவாசன் நகைகளை வாங்கிச் சென்றுள்ளார். அவர் மீண்டும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து நூதன கொள்ளையனை தேடி வருகின்றனர்.