தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்க சுவாமி கோயிலிலுக்குச் சொந்தமான யானை கோமதியை, கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என தனியார் தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், யானையை தனியார் அறக்கட்டளை பராமரிக்கும்படி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும், யானை கோமதியை முகாமில் வைத்து பராமரிக்க தயாராக இருப்பதாகவும் கூறி, வனத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம் சத்தியநாராயணன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, யானைகள் ஆராய்ச்சி நிபுணர் அஜய் தேசாய் தலைமையிலான குழுவினரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள யானைகளின் நிலை குறித்து நிபுணர் குழு மூலம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.