#chennaiecr #ecrroad சென்னை ECR சாலை வழக்கில் முக்கிய திருப்பம் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் டெண்டர் நிராகரிப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில் முடிவெடுக்கப்படும் வரை ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. சென்னை திருவான்மியூர்-உத்தண்டி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், போபாலை சேர்ந்த திலீப் பில்ட்கான் நிறுவனம், தங்களின் தொழில்நுட்ப டெண்டர் உள்நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தது. டெண்டர் நிராகரிப்புக்கு எதிராக 5 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதற்கு 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது. மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கப்படும் வரை ஒப்பந்தப்பணிகள் வழங்கப்படமாட்டாது என அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், 10 நாட்களில் மேல்முறையீட்டிற்கு முடிவெடுக்கவும், அதுவரை பணிகளை வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்தனர்.