வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால், மோட்டார் பம்பு ஆபரேட்டர்களை 120 நாட்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நூறு சதவீத தேர்ச்சி வழங்கிய மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களின் கல்விச் சுற்றுலாவிற்கு 20 லட்ச ரூபாய் வழங்கவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பெருநகர சென்னை மாநகராட்சியின் தடையின்மை சான்று வழங்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை, வரும் 2026- ஆம் ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.