ஆட்சியர் அலுவலகம், சென்னை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, உலமாக்கள் சார்பில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய திருமாவளவன், இந்திய மக்களின் ஒற்றுமையை சிதைப்பதால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு 2 நிமிடங்கள் பிரார்த்தனையும் நடைபெற்றது.
கிண்டி, சென்னை
இதேபோல், சென்னை கிண்டியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில், பல்வேறு அமைப்புகள் இணைந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை, போலீசார் கைது செய்தனர்.
சென்ட்ரல் ரயில்நிலையம், சென்னை
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலும், பல்வேறு இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில், ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்றனர். பேரணியாக சென்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை, காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்