தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனை முற்றுகை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது பெண் குழந்தை, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாகக்கூறி, குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சென்னையைச் சேர்ந்த சுகன்யா - பிரகாஷ் தம்பதியரின் குழந்தை தனுஷியாவுக்கு, ஒன்றரை வயதில் இருந்தே நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதயத்தில் அடைப்பு இருக்கலாம் என்று கூறிய நிலையில், மேல் சிகிச்சைக்காக முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர். குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கான பணத்தை செலுத்தியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இந்நிலையில்,ஆபரேஷன் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குழந்தை இறந்துவிட்ட நிலையில், தங்களிடம் மிகவும் தாமதமாக அதுகுறித்து தெரிவித்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.